கர்நாடக மாநிலம், பெல்லாரி மாநிலத்தில் நடைபெற்ற நிலக்கரி சுரங்க ஒப்பந்தம் தொடர்பாக 40 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கர்நாடக முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா, அவரது இரு மகன்கள், மருமகன் உள்ளிட்ட 4 பேர் மீது இங்குள்ள சி.பி.ஐ. நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
எடியூரப்பா முதல் மந்திரியாக இருந்த போது தனது செல்வாக்கை பயன்படுத்தி ரெட்டி சகோதரர்களிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு, அவர்களுக்கு நிலக்கரி ஒப்பந்தத்தை வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. மேற்படி லஞ்சத் தொகையான 40 கோடி ரூபாய் எடியூரப்பாவின் குடும்பத்துக்கு சொந்தமான ஒரு அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டதாகவும் இதுதொடர்பான வழக்குக்கு பரிந்துரைத்த அம்மாநில லோக் அயுக்தா குறிப்பிட்டிருந்தது.
இவ்வழக்கு தொடர்பான விசாரணை பெங்களூரில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கு விசாரணைக்காக கடந்த மே மாதம் ஆஜரான எடியூரப்பா, மேற்படி குற்றச்சாட்டுக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கண்ணீருடன் வாக்குமூலம் அளித்திருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சி.பி.ஐ. நீதிமன்றம் எடியூரப்பா, அவரது இரு மகன்கள், மருமகன் ஆகிய 4 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டுள்ளது.
வரும் 2018-ம் ஆண்டு கர்நாடக மாநில சட்டசபைக்கு தேர்தல் நடக்க உள்ள நிலையில் கர்நாடக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி, எடியூரப்பா தனது முதல்வர் பதவியை இழக்க காரணமாக இருந்த நிலக்கரி வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தீர்ப்புக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடியூரப்பா, நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. நான் குற்றமற்றவனாகி விட்டேன் என கூறியுள்ளார்.